600 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, August 18, 2018

600 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை


தமிழகத்தில் காலியாகவுள்ள 600-க்கும் அதிகமான
கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை பதவி உயர்வு உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த இடங்கள் கிராம உதவியாளர்களைக் கொண்டு தகுதி அடிப்படையில் பதவி உயர்வின் மூலமும், கருணை அடிப்படையில் நியமனம் செய்யவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
தமிழகத்தில் 10,000-த்துக்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர் இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் குரூப் 4 பிரிவின் கீழ் வருகின்றன.
பெரும்பாலான இடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் எழுத்துத் தேர்வு மூலமாக நிரப்பப்படுகின்றன. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்கள், பதவி உயர்வு, கருணை அடிப்படையில் நிரப்பப்படுகின்றன
609 இடங்கள்
2017-18-ஆம் ஆண்டுக்கான கிராம நிர்வாக அலுவலர்களுக்கான காலிப் பணியிட மதிப்பீட்டை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இந்த மதிப்பீட்டின்படி, 609 காலியிடங்கள் உள்ளன. அதில், 341 காலியிடங்கள் கருணை அடிப்படையிலும், 268 இடங்கள் கிராம உதவியாளர்களுக்கு தகுதி அடிப்படையில் பதவி உயர்வு அளிப்பதன் மூலமாகவும் நிரப்பப்பட உள்ளன. எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு காலியிடங்கள் உள்ளன என்கிற விவரங்களை வருவாய் நிர்வாக ஆணையரகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, தஞ்சாவூரில் அதிகபட்சமாக கருணை அடிப்படையில் நிரப்ப வேண்டிய காலியிடங்களின் எண்ணிக்கை 34 -ஆகவும், பதவி உயர்வின் மூலம் நிரப்ப வேண்டியவை 27-ஆகவும் உள்ளன. இதேபோன்று, விழுப்புரம், காஞ்சிபுரம், திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதிகளவு காலியிடங்கள் உள்ளன.
கிராம உதவியாளர்களுக்கு வாய்ப்பு
கிராமப்புறங்களில் நிர்வாக அலுவலர்களுக்கு உதவியாளர்களாக பணியாற்றுவர்களே கிராம உதவியாளர்கள். அவர்களுக்கு ஊதியம் உள்ளிட்ட பணிச் சலுகைகள் மிகவும் குறைவாகும்.
அவர்களில் குறிப்பிட்ட அளவினர், பதவி உயர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர்களாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
மாவட்ட அளவிலேயே இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு பணிகளை பூர்த்தி செய்யும்படி வருவாய் நிர்வாக ஆணையரகம் கேட்டுக் கொண்டுள்ளது

Post Top Ad